இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு ஊடக அறிக்கை
இந்திய அரசாங்கத்தின் #வக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொவிசீல்ட் தடுப்பூசிகளை இந்தியா இலங்கைக்கு பரிசளிக்க உள்ளது. 2021 ஜனவரி 28 ஆம் திகதி விசேட ஏர் இந்தியா விமானம் ஒன்றின் மூலமாக இந்த தொகுதி தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் குறித்த தேவைக்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்ட பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு அவற்றினை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் இந்த தடுப்பூசி மருந்து தொகுதி சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
2. மிகமுக்கிய தற்செயல் நிகழ்வாக, மிகவும் புனிதமான துருது போயா தினத்தில் கொவிசீல்ட் தடுப்பூசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்ற நிலையில் 2020 மே மாதம் புனித வெசாக் வாரத்தில் முதற்தடவையாக இலங்கைக்கு வருகைதந்த உயர் ஸ்தானிகர் கொவிட்19 நோய்க்கு எதிரான போராட்டங்களை இலங்கை எதிர்கொள்வதற்கு ஆதரவளிக்கும் வகையில் 12.5 தொன்கள் நிறையுடைய மருத்துவ பொருட்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். இந்நிலையில் புனித துருது போயா தினத்தில் புனித கங்காராம விகாரையில் இலங்கை மக்களின் நலனுக்காக உயர் ஸ்தானிகர் அன்றைய தினம் விசேட பிரார்த்தனைகளில் ஈடுபடவுள்ளதுடன் வணக்கத்துக்குரிய கலாநிதி கிரிந்தே அசாஜி தேரர் அவர்களிடம் உயர்ஸ்தானிகர் ஆசீர்வாதம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் காணப்படும் பௌத்த கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உயர் ஸ்தானிகர் அவர்களால் குறித்த விகாரையில் இருக்கும் பக்தர்களுக்காக உணவுகளும் வழங்கப்படவுள்ளன.
3. ஒக்ச்போட் அஷ்ட்ராசெனீக்காவின் கொவிட்சீல்ட் தடுப்பூசி இந்தியாவில் உள்ள சேரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் அவசர பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
4. கொவிட் பெருநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்த தடுப்பூசிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இருபத்தைந்து தொன்கள் நிறையுடைய மருத்துவ பொருட்கள் நான்கு தொகுதிகளாக இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள அதேநேரம் இலங்கையின் மருத்துவ அதிகாரிகளுக்காக மெய்நிகர் மார்க்கங்கள் ஊடான அனுபவப்பகிர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சார்க் நாடுகளுக்கான கொவிட் 19 அவசர நிதியத்திற்கு பாரிய அளவிலான நிதியினை ஒதுக்கீடு செய்த நாடுகளாக இலங்கையும் இந்தியாவும் காணப்படும் நிலையில் கொவிட்19 நோய்க்கு எதிரான போராட்டங்களில் இந்த இரு பங்காளிகளும் முன்னணியில் இணைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம். அத்துடன் இந்நோயினை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த முயற்சிகளுக்காக இலங்கையின் தலைமைத்துவத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5. அயலுறவுக்கு முதலிடம் மற்றும் சாகர் ஆகிய கொள்கைகளின் வழிகாட்டல்களுடன் 2021 ஜனவரி இருபதாம் திகதி முதல் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் கொவிட்19 தடுப்பூசிகள் அயல்நாடுகளுக்கும் வளைகுடா மற்றும் இந்து சமுத்திரத்தில் காணப்படும் ஏனைய நாடுகளுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மேற்கு ஆசியா, லத்தின் அமெரிக்கா போன்ற தூர தேச நாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் கரீபியன் மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் இருக்கும் நாடுகளுக்கும் இந்த தடுப்பூசியினை அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2020 செப்டம்பரில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் கொவிட் நோய்க்கு எதிரான போராட்டத்தில் அனைவருக்கும் உதவுவதற்கு இந்தியாவின் தடுப்பூசி வினைத்திறன் பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். உலகின் மருந்தகம் என அழைக்கப்படும் இந்தியா கொவிட்-19 நோயினை எதிர்கொள்வதற்கு அவசியமான மருந்துப் பொருட்களை 150க்கும் அதிகமான நாடுகளுக்கு அனுப்பியிருக்கும் அதேநேரம் இதில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகையானது முற்றுமுழுதாக நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.
கொழும்பு
27 ஜனவரி 2021



















