இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 02 ஆம் திகதி ஆரம்பமானது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ஓட்டங்களும், இங்கிலாந்து 290 ஓட்டங்களும் எடுத்தன. 99 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்கு 270 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 4ஆவது நாளான நேற்று முன் தினம் (05) இந்திய அணியினர் ஆட்டநேர முடிவில் 2ஆவது இன்னிங்சில் 148.2 ஓவர்களில் 466 ஓட்டங்கள் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 32 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்கள் பெற்றது.
இதனைதொடர்ந்து நேற்று (06) 5ஆவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இடம்பெற்றது. இதில் மேலும் 291 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய இங்கிலாந்து அணி 92.2 ஓவர்களில் 210 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனால் இந்திய அணி 4 ஆவது டெஸ்ட் போட்டியில் 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மான்செஸ்டரில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.














