பொலன்னறுவை மாவட்டத்தின் ஏலஹெர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தியபெதும, பெரகும்கம யுத்தவீரர்கள் வீட்டுத் திட்டத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அங்குள்ள அடிப்படை வசதிகளை விரைவாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆராயவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடந்த ஜூன் 26 ஆம் திகதி அங்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்வீட்டுத் திட்டத்தின் பயனாளிகளான யுத்தவீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குதல், திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துதல் மற்றும் இக்கண்காணிப்பின் போது அடையாளம் காணப்பட்ட விடயங்களை எதிர்காலத்தில் மேலும் திறம்படவும் ஒருங்கிணைந்த வகையிலும் முன்னெடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இவ்விஜயம் மேட்கொள்ளப்பட்டது.
இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், பயனாளிகளில் பலர் தமக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் குடியேறாமல் இருப்பதன் காரணமாக அப்பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பது தெரியவந்தது. மேலும், குடிநீர், மின்சாரம் மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளும் தாமதமடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டது. இந்நிலையை உடனடியாகச் சீர்செய்யும் நோக்கில், ஏலஹெர பிரதேச சபையும் பிரதேச செயலாளர் அலுவலகமும் இணைந்து சிறிய அளவிலான நீர்வழங்கல் திட்டங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான திட்டங்கள் ஊடாக குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு, வாரச் சந்தை வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தில் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் திரு. டி. பி. சரத், பொலன்னறுவை மாவட்டச் செயலாளர், கிழக்கு பாதுகாப்புப் படைகளின் தளபதி, மேலதிக மாவட்டச் செயலாளர், ரணவிரு சேவைகள் அதிகாரசபையின் தலைவர், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய ஏனைய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


