கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் டாக்டர் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,
தெரிவு செய்யப்பட்ட 55 கர்ப்பிணி தாய்களுக்கு முருங்கை மரக் கன்றுகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் டாக்டர்.கே.கிரிசுதன், ஏர்ன் சிலோன் (பிரைவேட்) லிமிடெட்டின் முகாமையாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அத்துடன் மட்டக்களப்பு சுகாதார மருத்துவ அதிகாரிகள்,
பொது சுகாதார மருத்துவ மாதுக்கள்,
மட்டக்களப்பு மருத்துவச் சுகாதார அதிகாரி பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள்,
பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரத்த சோகை நோயை கட்டுப்படுத்துவதற்கு முருங்கை இலைகளின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் பற்றி இதன்போது விளக்களிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


