மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதிகளில் வசித்து வரும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான காப்பக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான "பெக்கர்ஸ் ப்ரீ பெட்டிகளோ (Baggers free Batticaloa)" திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (17) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடல், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி வைத்தியர் ஆர். முரளீஸ்வரனினால், மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மனநிலை பாதிக்கப்பட்டு/ பாதிக்கப்படாமலும் வீதிகளில் தங்கி இருப்பவர்கள் தொடர்பான திட்ட அறிக்கை ஒன்று அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அது ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுக்கு குறித்த திட்டத்தை தெளிவுபடுத்தும் நோக்கில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இறுதியான புள்ளி விபரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3263 பேர் வீடுகள் மற்றும் வீதிகளில் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும், 29 நபர்கள் வீதியில் மாத்திரம் தங்கியிருப்பதாகவும் சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்தது.
மேலும், "பெக்கர்ஸ் ப்ரீ பெட்டிகளோ (Baggers free Batticaloa)" திட்டத்தினால் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அனாதரவற்ற நிலையில் பகல் இரவு பாராது, மனநிலை பாதிக்கப்பட்டு/ பாதிக்கப்படாமலும்/ யாசகர்களாகவும் வீதிகளில் தங்கியிருக்கும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆதரவளித்து, சிகிச்சை அவசியமாயின் அதனையும் வழங்கி, தங்குமிடம், உணவு மற்றும் அவசியமான தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களை சுமூகமான மனித வாழ்வுக்கு கொண்டு வருவதற்கு ஏற்றவாறு காப்பகம் ஒன்றை அமைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். தனன்ஜயன் மாநகர சபையின் கீழ் காணப்படும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள கட்டடம் ஒன்றை இதற்காக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இத்திட்டத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்வதாக மாவட்ட செயலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டதுடன், இவ்வாறு அனாதரவற்ற நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படாமலும் தங்கியிருப்பவர்கள் மற்றும் யாசகர்களுக்கான காப்பகம் ஒன்றை நடாத்துவது தொடர்பான அவசியம் இதன்போது சகலரினாலும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜி. பிரணவன், திட்டமிடல் பணிப்பாளர் எஸ். நவநீதன் உட்பட சமூக சேவைகள் திணைக்களம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, மாவட்ட போலீஸ், சூர்யா பெண்கள் அமைப்பு, தேவை நாடும் மகளிர் அமைப்பு, விமோசனா போன்றவற்றின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.


