நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு ஆயித்தியமலை கமநல சேவை நிலையத்தில் அண்மையில் (03) இடம் பெற்றது.
வவுணதீவு தென்னை அபிவிருத்தி சபையின் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக தென்னை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பிராந்திய முகாமையாளர் கே.ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.
இதன் போது தென்னை விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், செய்முறைப் பயிற்சிகள் ஊடாகவும் தெளிவுபடுத்தப்பட்டு, விவசாயிகளுக்கான உரம் வழங்கிவைக்கப்பட்டது.
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அனுசரனையுடன் நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானிய திட்டத்தின் கீழ் காய்க்கும் மரங்களுக்கான (APM) உரம் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகது.
அரசாங்கத்தினால் இப்பிரதேசத்தில் தெங்கு பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளை வலுவூட்டும் முகமாக 12000 பெறுமதியான APM உரத்தினை 4000 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


