கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (27.05. 2025) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 5000 மில்லியன் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள், l றோட் திட்டத்தின் தொடர்ச்சி, பச்சிலைப்பள்ளியில் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதிகள், மாகாண சபையினால் அமுல்படுத்தப்படும் வீதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மேலும் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 2024, 2025ம் ஆண்டு காலப்பகுதிகளில் நகர அபிவிருத்தி அமைச்சின் இலவச இணைப்புக்கள், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 500 இலவச இணைப்பு வழங்கல், ஆனைவிழுந்தான் சமுதாய நீர் வழங்கல் திட்டத்தினை நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் திட்டத்திற்குள் உள்வாங்கல் முதலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மின்சார இணைப்பு திட்டத்தின் கீழ் 2024, 2025ம் ஆண்டுகளுக்கான காலப் பகுதிகளில் நகர அபிவிருத்தி அமைச்சின் இலவச இணைப்புக்கள், தாழ் அழுத்த மின் பாதை(New LT line) தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
தொடர்ந்து காணி உரிமை மற்றும் எல்லைகள் தொடர்பில் வனவளத்திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடனான பிணக்குகள், புலிக்குளம், பேருந்து நிலையக் காணி தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களான வீட்டுத்திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட வேலைகள், கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழான மாகாண உள்ளுராட்சி அமைச்சின் கிராம அபிவிருத்தித் திட்டங்கள், கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கிராம அபிவிருத்தித் திட்டங்கள். (12 கிராமங்களின் அபிவிருத்தி, 95 கிராம அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு), விசேட கிராம மட்டத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாவட்ட விவசாயக் கிளையின் வேலைகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேலைகள், மணல் அகழ்வு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாஜினி, திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன், பிரதேச செயலாளர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர், விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.