உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி புறாமலை தீவு மற்றும் திருகோணமலை கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை சுத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (27) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
உலக சுற்றுச்சூழல் தின தேசிய கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 முதல் ஜூன் மாதம் 05 வரை நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2025 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தை "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்" என்ற உலகளாவிய கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டின் உலகளாவிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணும் இறுதி இலக்காக பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளைப் பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் அதிகாரிகள், அரச உயரதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.