திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்களின் நலன் மற்றும் அவர்களின் திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் உத்தியோகபூர்வமாக திறப்பு

திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்களின் நலன் மற்றும் அவர்களின் திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம்  உத்தியோகபூர்வமாக திறப்பு
  • :

திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் அவர்களின் திறன் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு அமைக்கப்பட்ட திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் நேற்று (17) கிண்ணியா, நடுவூற்று பிரதேசத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வளமான நாடு – அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தில் உள்ள "தடைக்களற்ற சமூக வாழ்வு – நீதியான உள்ளடக்கம்" என்ற
தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக இலங்கையில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட முதலாவது பகல் நேர பராமரிப்பு நிலையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபீள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே,பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோரின் தலைமையில் பிள்ளைகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

​முதற்கட்டமாக, 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபாய் செலவில் திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு, குருநாகல், அனுராதபுரம், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 10 நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 10 ஆசிரியர்கள், 6 உதவியாளர்கள் மற்றும் 2 பணியாளர்களுக்கான உத்தியோகபூர்வ பணி நியமனக் கடிதங்கள் இதன்போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, விசேட தேவையுடைய குழந்தைகளின் மனமகிழ்விற்காக அவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், நிகழ்வில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் அமைச்சரினால் விசேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே தெரிவிக்கையில்,

"மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோரிடம் இருந்து மட்டுமே அன்பும் பாதுகாப்பும் கிடைக்கிறது என்ற நிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். எதிர்காலத்தில் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மூலமாகவும் அக்குழந்தைகளுக்குத் தேவையான அன்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும்.

இத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தும் நோக்கில், வரும் 2027 ஆம் ஆண்டில் 10 மாவட்டங்களிலும், 2028 ஆம் ஆண்டில் மேலும் 13 மாவட்டங்களிலும் இவ்வாறான நவீன பகல் நேர பராமரிப்பு நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

​திருகோணமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுமார் 280 பேர் உள்ளனர், அவர்களில் சுமார் 100 பேர் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்றனர். இந்த திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் மூலம் சுமார் 100 குழந்தைகளுக்கு சேவைகளை வழங்க முடியும்.

​இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மூலம் காலையில் குழந்தைகளை நிலையத்திற்கு அழைத்து வருவதும், பின்னர் மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதும் திட்டமிடப்பட்டுள்ளது.

​மேலும், இந்த வேலைத்திட்டம் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த ஆண்டுக்குள் இவ்வாறான 10 நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மேலும் 15 நிலையங்களை ஆரம்பித்து நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் குறைந்தபட்சம் ஒரு நிலையத்தையாவது ஸ்தாபிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மேலதிக செயலாளர் நாலிகா பியசேன, திருகோணமலை மாவட்ட செயலாளர், சமூக சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.ஜி. தர்ஷனி கருணாரத்ன, தேசிய முதியோர் செயலக பணிப்பாளர் சதுர மிஹிந்து உள்ளிட்ட அரச உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

Related Articles