கல்வி அமைச்சின் சமய ஆலோசனை சபையை நியமிப்பதற்கான வேலைத்திட்டத்தின்கீழ் இஸ்லாமிய சமய கல்வி ஆலோசனை சபைக்கான புதிய நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (11 ) கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, இஸ்லாமிய சமய பாடசாலைகளில் காணப்படுகின்ற சிக்கல்கள், இஸ்லாமிய மாணவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் மற்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்த்திருத்தங்களை செயற்படுத்தும்போது கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
“இஸ்லாமிய சமய ஆலோசனை சபையை ஸ்தாபிப்பதன் மூலம் கல்வி சீர்த்திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றிய கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நபர்களை மையப்படுத்திய பரீட்சை முறைக்கு அப்பால், நிகழ்கால உலகத்திற்கு ஏற்ற மற்றும் மனித நற்பண்புகள் நிறைந்த பிள்ளையொன்றை உருவாக்குவதற்கான கல்வி முறையை தோற்றுவிப்பதே எமது அரசாங்கத்தின் இலக்காகும்.
ஒரே பாடசாலைக்குள் அனைத்து மாணவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கல்வி பயிலுவதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமையாகும். அதன் மூலம் அனைத்து சமயங்களையும் மதிக்கின்ற, ஒருவரை பற்றி ஒருவர் நினைத்துப் பார்க்கின்ற தலைமுறையை உருவாக்க இயலும் என்றும் நான் நம்புகிறேன்.
நிகழ்கால மாணவச் சமுதாயம் ஈஸ்டர் தாக்குதல், கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கிறது. இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள கல்வித்துறையை மீளவும் கட்டியெழுப்புவதற்கு உங்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை.” என்று குறிப்பிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் கல்லி அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.