பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்டநடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறு பணித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இதனை நாளையிலிருந்தே ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 11.06.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது.
பெரும்பாலான வீதிகளின் ஓரங்களில் பார்த்தீனியம் செடி காணப்படுகின்றது. பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதுடன் விரைவாக அதைச் செயற்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
பிரதம செயலாளர், இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளைக் குறிப்பிட்டதுடன் அதற்கு அமைவாக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அதனுடன் தொடர்புடைய 12 திணைக்களங்களையும் இதில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் சட்டநடவடிக்கை எடுப்பதற்குரிய அலுவலர்களுக்கான அடையாள அட்டையையும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளரால் பார்த்தீனியம் ஒழிப்புக்குரிய நடவடிக்கை திட்டம் தயாரிக்கப்பட்டு சகல திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதை துரிதமாக நடைமுறைப்படுத்த சகலரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் கோரினார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், டெங்கு கட்டுப்பாட்டு வாரம் போன்று இதற்கும் ஒரு வாரத்தைச் செயற்படுத்தலாம் என யோசனை முன்வைத்தார். இதன்போது குறிப்பிட்ட ஆளுநர், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு ஒரு வாரத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் அந்த வாரத்தில் மாத்திரம் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்போது நிச்சயம் பாதுகாப்பான கையுறை மற்றும் முகக் கவசம் அணிந்து செய்யவேண்டும் என யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.