2024 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளநிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயத்தின் பாதிப்புகள் பரீட்சிக்கப்பட்டு நிறைவடைந்துள்ள, மாவட்டங்களுக்கான இழப்பீட்டுத் தொகைகளை விடுவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்து, கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையை இம்மாத இறுதிக்குள் செலுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கான இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான நடவடிக்கைகளை 2025 பெப்ரவரி மாத முதல் பகுதியில் ஆரம்பிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விழப்பீட்டுக் கொடுப்பனவை செலுத்தும் போது ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட சகல நடவடிக்கைகளையும் எடுத்து, இழப்பீட்டு பாதிப்புக்கு உட்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அத்தொகைகளை வைப்பிலிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.