6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று (03) கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்தக் கலந்துரையாடலுக்கு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா (ஓய்வு) மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி ஆகியோர் இணைத் தலைமை தாங்கினர்.
இரு நாடுகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும், ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்த வருடாந்த இருதரப்பு கலந்துரையாடல், தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்வதற்கும், ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது. கலந்துரையாடல்களின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவங்களுக்கு இடையிலான ஈடுபாடு, பயிற்சி மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பு பிரதிநிதிகளும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தொடக்க அமர்வில் உரையாற்றிய இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), இலங்கை ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார்.
மேலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைக்காகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காகவும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். தற்போதுள்ள ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்வதற்கும், ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் ஆயுதப் படைகளின் பாதுகாப்பு உரையாடல் ஒரு உயர்ந்த தளமாகச் செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், மாண்புமிகு ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக பாகிஸ்தான் தூதுக்குழுவினருக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, பாகிஸ்தான் தூதுக்குழுவினருக்கு வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு இலங்கை அரசாங்கத்திற்குத் தனது பாராட்டைத் தெரிவித்தார். மேலும், இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்புப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதில் பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் (ஓய்வு), மேலதிக செயலாளர் (பாதுகாப்பு), கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், இராணுவ பிரதம அதிகாரி, பாதுகாப்பு அமைச்சசின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பலறும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.


