ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, கல்வித் துறையில் நிலவும் வெற்றிடங்கள் குறித்த புள்ளிவிபரங்களை முன்வைத்த பிரதமர், தற்போதைய நிலையை பின்வருமாறு விளக்கினார்,
இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) 903 வெற்றிடங்கள்.
இலங்கை அதிபர் சேவை (SLPS) 3,790 வெற்றிடங்கள்.
இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்ட பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனங்களைப் பொறுப்பேற்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, 2026 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் நேர்முகத் தேர்வுகளை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், 2021 முதல் 2025 வரையான காலப்பகுதியில் புதிதாக உருவான வெற்றிடங்களுக்காக, அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் எதிர்காலத்தில் போட்டிப் பரீட்சைகளை நடாத்தி புதிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும்.
அதிபர் சேவையில் இணைந்துகொள்வது தற்போது ஒரு புதிய ஆட்சேர்ப்பாகக் கருதப்படுவதால், சம்பள நிர்ணயத்தின் போது எழுந்துள்ள சிக்கலுக்குத் தீர்வாக, அதிபர் சேவைக்கான நியமனத்தை ஒரு "பதவி உயர்வாகக்" கருதிச் சம்பள மாற்றங்களைச் செய்வதற்குத் தேவையான அனுமதியைப் பெற புதிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கல்வித் துறையில் மாத்திரமன்றி, ஏனைய பல துறைகளிலும் நிலவும் சம்பள நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வு அவசியமாகும். அதற்காக அரசாங்கத்தினால் புதிய சம்பள ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இவ்வருடத்தில் அந்த ஆணைக்குழுவினூடாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய அதிபர்களின் திறன் விருத்திக்காகப் பின்வரும் பயிற்சித் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன
ஆரம்பக் கடமைப் பயிற்சி. இரண்டாம் தரம் மற்றும் முதலாம் தரத்திற்குப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னர் வழங்கப்படும் கொள்ளளவு அபிவிருத்திப் பயிற்சிகள்.மாகாண மற்றும் வலய மட்டத்தில் நடாத்தப்படும் காலோசிதமான விழிப்புணர்வுத் திட்டங்கள்.
அதிபர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் நிர்வாகச் சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்த முடிவுகளின் அடிப்படையில் அமைச்சரவையினூடாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


