அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கிலும், கடமைகளை திறம்பட நடாத்தி செல்வதற்கும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களுக்காக அரச மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 150 மணித்தியாலய சிங்கள பாாடநெறியினை பூர்த்தி செய்த மட்டக்களப்பு ஆசிரியர்கள்,தபால் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆசிரியர் ஏ.எம்.இஸ்மாயிலின் நெறிப்படுத்தலில், மொழித் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியரான எம்.எம்.செய்னுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக 233 வது ராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் எஸ்.நிலந்த விஜேசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அபுல் ஹஸன்,கோறளைப் பற்று மேற்கு கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எம்.எம்.தாஹிர், 233 ராணுவ படைப் பிரிவின் பொது மக்கள் இணைப்பாளர் லுத்தினன் கேர்ணல் அனுர புன்னியசிரி ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தியாலய அதிபர் ஏ.ருபாய்தீன்,பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா,EPSI இணைப்பாளர் ஆர்.ஜுனைதீன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் அமீர் அலி,மொழிப் போதனாசிரியர் எம்.ஐ.பாரூக், பிஸ்மில்லாஹ் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் ஆசிரியர் எம்.பீ.எம்.சனூஸ் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த அரச உத்தியோகத்தர்கள் 65 பேருக்கான சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் உத்தியோகத்தர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் பிரதம அதிதி,நிறுவனத் தலைவர்,போதனாசிரியர், இணைப்பாளர் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.