இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்
  • :

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர், மேதகு Khalid Hamoud Nasser Alkahtani அவர்கள், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெறும் முகமாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை 2026 ஜூலை 16ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது, தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவையும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக நிலவிவரும் ஒத்துழைப்புகளையும் பாராட்டினார்.

 

அத்தோடு, 'டித்வா' சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு வழங்கப்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகளுக்காகச் சவூதி அரேபிய இராச்சியத்தின் அரசாங்கத்திற்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். சவூதி அரசாங்கத்தின் நிதி அனுசரணையிலான செயற்திட்டங்களின் ஊடாக, இலங்கையின் கல்வித்துறைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

தனது பதவிக்காலத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய நெருக்கமான ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் தூதுவர் அல்-கஹ்தானி நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இலங்கைக்குச் சவூதி அரேபிய இராச்சியம் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன்களுக்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் தங்களின் கூட்டு அர்ப்பணிப்பை இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர்.

 

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவின் பிரதித் தூதுவர் Yasir Alhazemi, தூதுவரின் செயலாளர் A.C.A. Mazahir, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகாஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

 

பிரதமர் ஊடகப் பிரிவு

Related Articles