கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் ஆளுநர் பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் ஆளுநர் பார்வையிட்டார்
  • :

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

திருவையாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தின் கீழ் 500 ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுவதாக நீர்பாசனப் பொறியியலாளர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார். அங்கு சூரியமின்கலம் (சோலர்) மூலமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுவதால் ஏற்று நீர்பாசனத்துக்காக விவசாயிகளிடமிருந்து குறைவான தொகையே அறவிடப்படுவதாக ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்மூலம் 30 மில்லியன் ரூபா வரையில் இலாபம் பெறப்பட்டுள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தி மேலதிக சூரியமின்கலம் மூலமான மின்சார உற்பத்தியை அதிகரித்தால் விவசாயிகளிடமிருந்து மாதாந்தம் பெறப்படும் தொகையைக் குறைக்க முடியும் எனவும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் இதன்போது ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

இதன் பின்னர் புழுதியாற்றுக்குளம் மற்றும் புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை ஆளுநர் சென்று பார்வையிட்டார். 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 2018ஆம் ஆண்டு கைவிடப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். 70 ஏக்கரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

தற்போது இந்தத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு 70 மில்லியன் ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியமின்கலம் மூலமான மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு இலங்கை மின்சார சபைக்கு அதனை வழங்குவதன் மூலம் விவசாயிகளிடமிருந்து குறைந்த தொகையைப் பெற்று இதனைச் செயற்படுத்த முடியும் என நீர்பாசனப் பொறியியலாளர் ஆளுநருக்கு விளக்கமளித்தார். புழுதியாற்றுக் குளத்தையும் ஆளுநர் பார்வையிட்டார். குளத்தின் அணைக்கட்டு புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் விவசாயிகள் இதன்போது குறிப்பிட்டனர். கமநலசேவைகள் திணைக்களத்திடமிருந்து குளத்தை நீர்பாசனத் திணைக்களத்துக்கு உள்வாங்குவதற்கும் ஏனைய தொடர் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]