கடந்த காலத்தை மறந்து விடுங்கள் என்று தான் கேட்க விரும்பவில்லை சமாதான கரங்களை பலப்படுத்தும் வகையில் எமது அரசின் செயற்பாடுகள் அமைகிறது என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (20.06.2026) மாவட்டச் செயலகத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கெளரவ நீதி அமைச்சர் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவது நாட்டின் அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகள் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்குவது போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதுதான் இன்றைய பரம்பரையின் பொறுப்பாக உள்ளது எனவும், அந்தப் பொறுப்பு மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார்.
வட மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் போன்ற அனைத்து பகுதிகளிலும் வடக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இன்றி கடினமான பொறுப்பை நிறைவேற்றும்படி எமது அரசாங்கத்திற்கு பொறுப்பை வழங்கியுள்ளதாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் எவ்வளவு சொற்பொழிவுகளை ஆற்றினாலும் உரையாடல்களை மேற்கொண்டாலும் அதற்கு ஈடாகாது எனவும், அதற்குப் பதிலாக செயற்பாட்டு ரீதியிலே செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில் தான் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒருமைப்பாட்டு அலுவலகம் என்பனவும் எமது அமைச்சின் கீழ் இயங்குவதாகவும், அவற்றின் செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதாகவும் யுத்தத்தினால் நடக்க கூடாத சில நிகழ்வுகள் நடந்துள்ளதாகவும் அது தொடர்பாக ஆழ்ந்த கவலைகள் இருப்பதாகவும், ஒருவரையும் கடந்த காலத்தை மறந்து விடுங்கள் என்று கேட்க விரும்பவில்லை எனவும், முன்னோக்கி புதிய வடிவத்திலே சிந்தித்து, புதிய வடிவத்திலே செயற்பட்டு செல்ல வேண்டும் எனவும், வரும் காலத்தில் இவற்றுக்கு தீர்வுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், சமாதானத்தின் கரங்களை நீட்டுவதற்காக தான் கடந்த காலத்தில் மூடப்பட்டிருந்த பாதைகளை திறந்து விட்டிருப்பதாகவும், அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகள் சமாதான கரங்களை பலப்படுத்தும் வகையிலே தான் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இன்று காணாமல் போன அலுவலகம் தொடர்பாகவும் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடைய வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும், இச் செயற்பாடுகள் காரணமாக மக்கள் ஓரளவுக்கு ஏனும் இருந்த நிலையை விட அலுவலகம் தொடர்பாக நம்பிக்கையுடன் செயற்படுகின்றார்கள் என்பதை உணர முடிந்துள்ளதாகவும், காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளின் போது இவ் இடங்களுக்கு வரும் மக்களை அவதானித்தால் அங்கு வரும் மக்களின் நம்பிக்கை அதிகரித்து காணப்படுவதையும் சுட்டிக்காட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.
இவ் அலுவலகத்துக்கு தேவையான நிதிகள் அமைச்சரவையின் அனுமதியுடன் 375 மில்லியன் ரூபாய் அலுவலகத்தின் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஒதுக்கியுள்ளதாகவும், இவ் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களின் 69 வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், மேலதிக நிதி தேவைப்பட்டால் அதனை ஒதுக்குவதற்கு தயாராக உள்ளதாகவும் இப் பிரச்சினையை தொடர்ச்சியாக முன்னெடுத்து கொண்டு போக வேண்டிய சூழ்நிலை இல்லை எனவும், எதிர்வரும் இரண்டு வருட காலத்துக்குள் இப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதே எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
விசாரணைகளின் எதிர்பார்ப்பு வேகமாக தரவுகளை எடுத்து எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும் எனவும், இதன் எதிர்பார்ப்பு விசாரணைகளை நடாத்தி சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதும் இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக உதவிகள் செய்வது நியாயமான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அதனை செய்து முடிக்க வேண்டும் என்று தான் எண்ணுவதாகவும், உயிர் மதிக்க முடியாத பெறுமதி வாய்ந்தது, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இறுதிக் கட்டத்திற்குள் செல்லலாம் எனவும், சாட்சியத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரம், கல்வி கற்கும் வசதிகள், சுகாதாரம், வீட்டுத்திட்டங்கள், தொழில் வாய்ப்புகள் அனைத்தும் உள்ளடங்களாக திட்டம் ஒன்றினை கலந்தாலோசித்துள்ளதாகவும் அவ்வாறான திட்டங்களை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் இப் பிரச்சினையை சுமுகமான நீதியான முறையிலே தீர்ப்பதற்காகத்தான் எதிர்பார்த்து உள்ளதாகவும் மேலும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.


