அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றதுடன் குறித்த அபிவிருத்திக் குழு கூட்டத்தில் 8130 மில்லியன் பெறுமதிவாய்ந்த 2077 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஒருங்கிணப்புக் குழுவின் புதிய தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், அபிவிருத்தி திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், வீதிகள் பாலங்கள் அமைத்தல், யானை வேலி அமைத்தல், உரம் வழங்கல், அரச மருந்தகம் அமைத்தல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இடப்பற்றாக்குறை, காணி பிரச்சினைகள், மேய்ச்சல்தரை பிரச்சினை, ஆளணிப் பற்றாக்குறை, குடிநீர் வழங்கல், உட்பட்ட பல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் முக்கியமாக மக்கள் நலப்பணிகளை தெரிவு செய்து துரிதகதியில் நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ரீ.ஏ.சி.என். தலங்கம, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சனி ஸ்ரீகாந்த், நவருபரஞ்ஜினி முகுத்தன் (காணி), மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள் ஏனைய மற்றும் திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது விவசாயக் குழு, கைத்தொழில் குழு, போக்குவரத்து குழு, சுற்றாடல் குழு ஆகிய நான்கு குழுக்களும் மாதாந்தம் கலந்துரையாடி தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதுடன் குறித்த கூட்டறிக்கைகள் மாவட்ட ஒருங்கினைப்பு குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.