பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகளுள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெறும் நாடுகளில் இலங்கை வெற்றியை நோக்கி பயணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் விரயம், ஊழல் மற்றும் மோசடிகள் 100% ஒழிக்கப்படாவிட்டாலும், அவை குறைந்த மட்டத்தில் பேணப்படுவதே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த புதன்கிழமை (01) நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பட வரைகளை உத்தியோகத்தர்கள் , தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சையில் சித்தியடைந்து முகாமைத்துவ உதவியாளர் சேவையிலிருந்து விசேட தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
இந்நியமன விழா திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது 61 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கும், 07 படவரைகளை உத்தியோகத்தர்களுக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், முகாமைத்துவ சேவையிலிருந்து விசேட தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்ட 33 உத்தியோகத்தர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர,
"நிதி ஒழுக்கத்தைப் பேணுவதன் மூலம் அரச சேவையை வெற்றிகரமானதாக மாற்றியமைக்க நம்மால் முடியும். கடந்த காலத்தில் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்றொரு திட்டம் இருந்தது. நான் அந்த கருத்தாக்கத்துடன் உடன்படவில்லை. இப்போது புதிய நியமனங்களைப் பெறுபவர்கள் 'அருகிலுள்ள அலுவலகமே சிறந்த அலுவலகம்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்த நியமனங்கள் மாவட்ட நியமனங்கள் அல்ல, இவை கிழக்கு மாகாண நியமனங்கள் என்பதை அனைவரும் உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு விசேட விடயத்தைக் கூற வேண்டும். நியமனம் பெறும் இடத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த காலப்பகுதிக்குள் நியமனங்கள் மாற்றப்பட மாட்டாது. நான் ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், சிலர் அம்மாவுக்கு சுகமில்லை, அப்பாவுக்கு சுகமில்லை அல்லது மனைவிக்கு சுகமில்லை என்று கூறி நியமனங்களை மாற்றிக்கொள்ள வருகிறார்கள். நமது சேவை எங்கு தேவைப்படுகிறதோ, அங்கு நாம் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நாம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், தமக்குத் தேவையான இடங்களில் சேவை செய்ய முற்படும்போது அரச சேவையின் சமநிலை சீர்குலைந்துவிடும் என கூறினார்.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க, அரச சேவையின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பணியாண் தொகுதி மற்றும் திட்டமிடல்) என். மணிவண்ணனும் கலந்துகொண்டார்.


