அமெரிக்க தூதரக அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அந்தோணி வி. பிர்னோட் (Anthony V. Pirnot) மற்றும்
அரசியல் பிரிவுத் தலைவர் ஷைலஜா (ஷாய்) கிம் (Shailaja (Shai) Kim) ஆகியோர் இன்று (31) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தனர்.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் 'டித்வா' பேரிடர் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை நிர்வகிப்பதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் குறித்தும் இதன் போது நினைவு கூரப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் எதிர்காலத்தில் இந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.


