எண்ணக்கருக்களும் மக்கள் வாழ்க்கையும் ஒன்றோடொன்று பொருந்தக்கூடிய வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்
சுற்றாடல் அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி அறிவுறுத்தல்
புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம் ஏற்படுவதால், அதனைத் தடுப்பதற்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.
சுற்றாடல் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
“வளமான நாடு - அழகான வாழ்க்கை, நிலைபேறான உயிர்சார் உலகம் - என்னும் பசுமையான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ், சுற்றாடல் அமைச்சினால் 19,719 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது
இதன்படி, சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம், தேசிய மிருகக் காட்சிச்சாலைத் திணைக்களம், தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம், நீர் வளச் சபை, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களால் 2026ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஒலுவில் கடலரிப்பைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமித்து, விரைவாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.
இலங்கையில் மனித-யானை மோதலைக் குறைப்பதற்காக 2026 வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது விசேடமாக கேட்டறிந்ததுடன், மந்தகதியில் இடம்பெறும் இத்திட்டங்கள் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்றும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தும் திட்டங்கள் தாமதமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எனவே, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் குறித்து உணர்வுபூர்வமாகச் சிந்தித்து, இத்திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இவ்வருடத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை இவ்வருடத்திற்குள்ளேயே பயன்படுத்தி உரிய நிர்மாணப் பணிகளை மேற்காள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், யானை வேலியின் எல்லை மற்றும் அளவை தீர்மானிக்க வேண்டியது வனவிலங்கு வலயங்களை அடையாளப்படுத்துவதற்காக அன்றி, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே என்று ஜனாதிபதி இங்கு மேலும் வலியுறுத்தினார்.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நீர் மூலங்கள் பாதுகாப்புத் திட்டங்கள், தூய்மையான கடற்கரைத் திட்டம், கரையோரப் பொழுதுபோக்கு பூங்காக்களை உருவாக்கும் திட்டம், சிங்கராஜ மற்றும் கன்னெலிய வனப்பகுதிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான பிரவேச வசதிகளை உருவாக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரைாயடப்பட்டது.
இலங்கைக்காகத் தரமான கார்பன் உமிழ்வுக் கொள்கையொன்றை தயாரிப்பதற்குச் சுற்றாடல் அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன் மூலம் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொள்ள முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி இதன்போது குறிப்பிட்டார்.
வெளிநாட்டுக்கடன் உதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களைப் பெற்றுக்கொள்வது திட்டமிட்டபடி இடம்பெறாமையினால், ஒரே பணிக்காக வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதாகவும், அதனால் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளப்படும் வெளிநாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிலையான குழுவொன்றை நியமித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல இங்கு குறிப்பிட்டார்.
வனஜீவிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களுக்கு உரிய ஓய்வு விடுதிகளை அபிவிருத்தி செய்து, நவீன மற்றும் உயர் தொழில்நுட்பத்துடன் மக்களுக்கு வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், மலர் வளர்ப்பை ஒரு கைத்தொழிலாக அபிவிருத்தி செய்வதற்கும், உயிர் பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும் தேசிய தாவரவியல் பூங்காக்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு ஆகியோருடன், நிதி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


