இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதாரத் துறை தொடர்பான நிர்மாணம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் மனிதவள மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை தனித்தனியாக இங்கு மீளாய்வு செய்ததுடன், அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்வனவு செயல்முறை மற்றும் மருந்துகளின் தரப்படுத்தல் தொடர்பாக எழுந்துள்ள சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார உட்பட நிதி அமைச்சின் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு