இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் அதிரடி சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பின் போது, இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை (MRP), தொகுதி எண் (Batch Number), உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதிகள், அத்துடன் உள்ளடங்கிய பொருட்கள் (Ingredients) போன்ற எந்தவொரு அத்தியாவசிய விபரங்களும் நுகர்வோர் வாசிக்கக்கூடிய வகையில் குறிப்பிடப்படாமல், சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டன.
நுகர்வோர் சட்ட விதிமுறைகளை முற்றிலும் மீறி, இந்த பொருட்களில் எந்தவொரு விபரமும் உள்ளடக்கப்படாமல், முற்றிலும் வெளிநாட்டு மொழிகளில் மட்டுமே லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தன.
தற்போது குறித்த நிறுவனம் தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
⚠️ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோரை ஏமாற்றும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாட்டினால், நுகர்வோருக்கு அந்த உணவுப் பொருட்களின் தரம் குறித்தோ அல்லது அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தோ எந்தவொரு விபரத்தையும் அறிந்துகொள்ள முடியாமல் போகிறது.
உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளரின் விபரங்கள் மற்றும் கட்டாய சட்டபூர்வ விபரங்கள் இன்றி இவ்வாறான பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களை சந்தையில் விற்பனை செய்வது நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும்.
📞 பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது கட்டாய லேபிள் விபரங்கள் குறித்து நுகர்வோர் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறான சட்டவிரோத வணிகச் செயற்பாடுகள் குறித்து அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக உடனடியாக எமக்குத் தெரியப்படுத்துங்கள்.


