"பேக்கரித் தொழில்துறைக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும்" - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

"பேக்கரித் தொழில்துறைக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும்" - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-
  • :

பேக்கரித் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு ஷாங்கிரி-லாஹோட்டலில் ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நாடு பொருளாதார ரீதியாக ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இந்தத் தீர்க்கமான தருணத்தில், பேக்கரித் தொழில்துறையை வெறும் மாவு சார்ந்த தயாரிப்புகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாது, அதனை நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாக மாற்ற முடியும் என நான் நம்புகிறேன்.

உணவு உற்பத்தியில் தரமும் ஆரோக்கியமுமே அடிப்படையாக இருக்க வேண்டும். எனவே, சுவைக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்காது, செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் அற்ற, அதிக சத்துமிக்க ஆரோக்கியமான தயாரிப்புகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிசி மா, குரக்கன், தினை, பயறு மற்றும் உள்நாட்டு கிழங்கு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, பெறுமதி சேர்க்கப்பட்ட (Value-added) புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம், உலகளாவிய தரத்திலான 'ஆரோக்கியமான உணவு' (Health-conscious diet) எனும் போக்கினைப் பேக்கரித் துறையினரால் வெற்றிகொள்ளக்கூடியதாக அமையும்.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பலமாக அமையும். உள்ளூர் வர்த்தகர்களைப் பலப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. மூலப்பொருள் இறக்குமதிச் சிக்கல்களைக் குறைத்தல், புதிய தொழில்நுட்பங்களுக்கான சலுகைக் கடன் வசதிகளை வழங்குதல் மற்றும் சர்வதேசத் தரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சி மற்றும் சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு, தொழில் அமைச்சின் ஊடாக அரசாங்கம் ஏற்கனவே வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles