மாணவர் பாராளுமன்றம் என்பது அனுபவம் மற்றும் பயிற்சியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அரச நிர்வாகம் மற்றும் கொள்கைத் தயாரிப்பு வரையில் செல்வதற்கு மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் - நுகேகொட மஹாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவிப்பு
அனுபவம் மற்றும் பயிற்சியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அரச நிர்வாகம் மற்றும் கொள்கைத் தயாரிப்பு வரையில் மாணவர்கள் முன்னேறிச் செல்வதற்கு மாணவர் பாராளுமன்றம் உறுதுணையாக இருக்கும் என நுகேகொட மஹாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.
நுகேகொட மஹாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு 2025.06.13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நாட்டின் பெண்கள் தொடர்பில் கலாசார ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள விம்பம், பெண்கள் தொடர்பில் சமூகம் கொண்டிருக்கும் நிலைப்பாடு, பயிற்சி மற்றும் அனுபவம் போதியளவு இல்லாமை, குடும்பச் சுமை என்பன பெண்களைச் சார்ந்திருப்பது ஆகியவை கிராமப்புற மட்டத்தில் பெண்கள் முன்னேறுவதைத் தடுக்கின்றன என்று குழுக்களின் பிரதித் தவிசாளர் சுட்டிக்காட்டினார். இருந்தபோதும், இந்நாட்டின் சட்டவாக்கத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாகவும், உலக அரசியலில் இது பின்தங்கிய நிலையாக இருந்தாலும் அதற்கு சவாலாக அமையும் வகையில் பெண்கள் அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, எதிர்காலத் தலைவர்களாக மாறுவதற்கு ஆளுமைப் பண்புகள் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதில் மாணவர் பாராளுமன்றம் போன்ற திட்டங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சுட்டிக்காட்டினார். மேலும், பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே. ஆர். ஹேரத், பாராளுமன்றத்தின் பாரம்பரியம், வகிபாகம் மற்றும் பாராளுமன்றத்தின் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவியருக்கு அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
ஜனாதிபதி செயலகமும், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு நடத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, நுகேகொட மஹாமாயா மகளிர் கல்லூரியின் அதிபர் டி.ஏ.டி.வனகுரு, குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.