மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது - ஆளுநர்

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது - ஆளுநர்
  • :

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகரன், இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்கவேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதற்கமைவாக வியாபாரிகளுடன் கலந்துரையாடலை நடத்துகின்றோம்.

இலங்கையின் ஏனைய இடங்களில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அமைந்துள்ள இடங்களைவிட இந்தப் பொருளாதார மத்திய நிலையம் அமைந்துள்ள இடம் சிறப்பானது. வீதியோரத்தில் அமையப்பெற்றிருக்கின்றது. ஏனைய இடங்களிலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படும்போது அந்தப் பிரதேசங்கள் பிரபல்யமானவையாக இருக்கவில்லை. காலப்போக்கில்தான் அவை பிரபல்யமடைந்தன. அதேபோன்று எதிர்காலத்தில் இந்தப் பொருளாதார மத்திய நிலையமும் மாற்றமடையும் எனக் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் கடைகளைப்பெற்றுக் கொண்ட வியாபாரிகள் தமது பிரச்சினைகளை முன்வைத்தனர். கடைக்கான முற்பணத்தை வழங்கியபோதும் இதுவரை வியாபார நடவடிக்கை நடைபெறவில்லை என்பதையும், அங்கு எத்தகைய தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக அந்தப் பகுதியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு தரவேண்டும். விவசாயிகளுக்கும் தென்பகுதி வியாபாரிகளும் இதைநோக்கி வருவதற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொண்டு தரவேண்டும் என கடைகளைப்பெற்றுக்கொண்ட வியாபாரிகள் சந்திப்பில் சுட்டிக்காட்டினர். அதற்காக தமக்கு சில சலுகைகளை வழங்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர், விவசாயிகளுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக பொருளாதார மத்திய நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் இந்தப் பொருளாதார மத்திய நிலையத் திட்டம் தயாரிக்கப்படும்போது சில பகுதிகளில் சேகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டு அங்கிருந்து பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டு வரப்படவேண்டும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மத்திய நிலையத்தை செயற்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார் என அமைச்சர் இ.சந்திரசேகரன் குறிப்பிட்டார். மேலும் இந்தப் பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய நிர்வாகக் குழுவும் மீளமைக்கப்பட்டது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]