இந்நாட்டின் மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகள் குறித்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா தலைமையில் 2025.06.13 ஆம் திகதி கூடிய இந்தக் குழுக் கூட்டத்தில் வலு சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை மின்சார சபையின் பதில் தலைவர் பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம், இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை, மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
சூரிய வலுசக்தி உள்ளிட்ட மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கட்டமைப்புக்கு சேர்ப்பதில் காணப்படும் சிக்கல்கள், மின்சத்தி உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான முன்மொழிவுகள், இயற்கை திரவ வாயு (LNG) உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செலவை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அடிப்படை விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் எழுந்த விடயங்கள் மற்றும் மின்சக்தித் துறையிலான மறுசீரமைப்புகள் தொடர்பான அடிப்படைப் பிரேரணைகளை குழுவில் சமர்ப்பிக்குமாறு ஒவ்வொரு தரப்பினருக்கும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
இந்நாட்டின் வலுசக்தி உற்பத்திச் செலவை குறைக்கக்கூடிய முறைகளை பின்பற்றுவதற்கான நீண்டகால திட்டமொன்றுக்கு அமைய செயற்படுவதன் தேவையை குழு வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்காலத்தில் இது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடுவதற்கும் சம்பந்தப்பட்ட பிரேரணையை அறிக்கை ஒன்றின் மூலம் பாராளுமன்றத்துக்கு முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹஷீம், நலீன் பண்டார ஜயமஹ மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.