ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த உள்நாட்டு அலுவல்கள் பிரிவு (IAU) மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் (AIA) மதிப்பீடு குறித்த செயலமர்வு இன்று (27) கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நாட்டின் அரசியல் முறைமை மற்றும் அரச சேவை மாற்றம் அடைய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கேற்ப அரசியல் முறைமையை மாற்ற, மாற்று சக்தியொன்றை தேர்ந்தெடுத்ததாகவும் ‘ஊழலுக்கு எதிராக மக்களை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற செயலமர்வில் சிறப்புரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது மக்கள் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதால், அந்த நோக்கத்திற்காக நடைமுறைச் செயல்பாட்டில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை இந்த செயலமர்வு வலியுறுத்துகிறது என்றும் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நேர்மைத்திறனான அரச சேவைக்காக அணிதிரள வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்தப் செயலமர்வில் பொதுமக்களுடன் நேரடியாக பணியாற்றும் நிறுவனங்கள் என்ற அடிப்படையில் 25 மாவட்ட செயலகங்கள், 09 மாகாண செயலகங்கள், 24 அமைச்சுகள் மற்றும் 43 திணைக்களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பங்கேற்றனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர். எஸ். ஏ. திசாநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க, மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரிகளும் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.