பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் மற்றும் நிதி பிரதி அமைச்சர் அணில் ஜயந்த, கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, உட்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடு தொடர்பாக இதன் போது அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதற்கு விரிவுரையாளர்களின் சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது.
2025 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பள அதிகரிப்பின் போது அரசாங்க ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள அதிகரிப்பு என்பவற்றுக்கு இடையே வேறுபாடு காணப்படுவதாகவும், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு இடையே சம்பள அதிகரிப்பின் போது முரண்பாடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் சுட்டிக்காட்டியது.
இதன்படி பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம் தொடர்பாகக் காணப்படும் தொழில்நுட்பக் காரணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு, எடுக்கப்படும் முடிவுகளுக்கு இணங்க எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனத்தின் தலைவர் அனுருத்த கருணாரத்ன, செயலாளர் சாருதத்த இலங்கசிங்க உட்பட கல்வி அமைச்சு, பல்கலைக்கழகங்கள் மானியஙகள் ஆணைக்குழு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.