கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் தீவிரமடைந்து காணப்பட்ட நீண்டகால வெளிநாட்டுப் பாஸ்போர்ட் (பயணக் கடவுச்சீட்டுகளைப்) பெற்றுக்கொள்வதற்கான தாமதம் ஏற்பட்டமைக்கான தீர்வாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு தீர்மானித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு அறிவித்தலொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது.
இப்புதிய திட்டத்துடன் நேற்று (19) இந்த கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்த பயனாளிகளின் நீண்ட வரிசைகளில் கவனிக்கத்தக்கவாறு குறைவை அவதானித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று முன்தினத்தில் (18) இருந்து அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் கடமை நாட்களில் 24 மணி நேரமும் குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் பத்தரமுல்லை பிரதான அலுவலகம் பொது மக்களுக்காக சேவை வழங்குவதற்குத் திறந்திருக்கும்.
அத்துடன் இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வரும் பொது மக்களின் மற்றும் சேவை வழங்கும் அதிகாரிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தி அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால 2025.02.18 அன்று இரவு முழுவதும் கடவுச்சீட்டுக்கள் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட சகல பிரிவுகளையும் பார்வையிட்டு, சேவை வழங்கும் அதிகாரிகளுக்காக அவசியமான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
எதிர்காலத்தில் கடவுச்சீட்டுகளை பற்றாக்குறை இன்றி வழங்கக்கூடிய ஏற்பாடுகள் குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தில் காணப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலக அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களினால் கொண்டு வர வேண்டிய சகல ஆவணங்களையும் முறையாக குறைபாடுகள் இன்றி எடுத்து வருமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் ஏதேனும் பிழைகள் அல்லது திருத்தங்கள் இருந்தால் இவ்வாறான விண்ணப்பதாரர்கள் அந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய ஏனைய நிறுவனங்கள் திறந்திருக்கும் பகல் வேளையில் அச்சேவைகளைப் பெற்று, வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் பத்திர முல்லை பிரதான அலுவலகத்திற்கு வருகை தருமாறு அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
பொது மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகங்கள் அமைச்சு என்றும் தயாராகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளதாகவும் அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.