புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுவதால் நாளாந்தம் ஏற்படுகின்ற இழப்புக்கள் குறித்து கணக்காய்வு நடத்தவும் – கோபா குழு அறிவுறுத்து

புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுவதால் நாளாந்தம் ஏற்படுகின்ற இழப்புக்கள் குறித்து கணக்காய்வு நடத்தவும் – கோபா குழு அறிவுறுத்து
  • :

ஒவ்வொரு புகையிரதம் தொடர்பான வருமான, செலவு அறிக்கையைத் தயாரிக்க அறிவுறுத்தல்

நாளாந்தம் இடம்பெறும் புகையிரத சேவைகளின் தாமதங்கள் மற்றும் அவற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் பரிந்துரை
🔸 கோபா குழுவின் உறுப்பினர்களின் இரத்மலானை புகையிரத பராமரிப்பு வேலைத்தளத்திற்கான கள விஜயத்தின் போது புலப்பட்ட விடயங்கள் குழுவில் முன்வைக்கப்பட்டன

புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுவதன் காரணமாக நாளாந்தம் ஏற்படுகின்ற இழப்புக்கள் குறித்து கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தல் வழங்கியது.
புகையிரதத் திணைக்களம் தொடர்பான 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (05) கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

கடந்த மே மாதம் 08ஆம் திகதி இலங்கை புகையிரதத் திணைக்களம் கோபா குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோது 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ஆராயப்பட்டதுடன், இதில் புலப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அத்திணைக்களத்தை மீண்டும் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்காக முன்னாள் புகையிரத பொதுமுகாமையாளர் மற்றும் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், இந்த அதிகாரிகள் குழுவில் ஆஜராகியிருந்தனர்.

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்களின் கூட்டங்கள் போதியளவு நடத்தப்படாமை குறித்து குழு கவனம் செலுத்தியதுடன், 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டுவரை முகாமைத்துவக் குழு போதியளவு கூட்டப்படாமை குறித்து முன்னாள் அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத பொது முகாமையாளர் ஆகியோரிடம் குழு கேள்வியெழுப்பியது. கொரோனா தொற்றுக் காலத்தில் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாமல் போனதாக முன்னாள் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இருந்தபோதும், 2024 ஆம் ஆண்டில் அதை முறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் திட்டமிடப்பட்ட கடைசி கூட்டத்தை நடத்த முடியாமல் போனதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலைமை காரணமாக நிறுவனத்தின் வினைத்திறன் குறைந்தமையால் 2022ஆம் ஆண்டு 64 புகையிரத சேவைகளும், 2023ஆம் ஆண்டு 61 புகையிரத சேவைகளும், 2024ஆம் ஆண்டு 46 புகையிரத சேவைகளும் காலதாமதம் அடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், நாளாந்தம் புகையிரத சேவைகள் காலதாமதம் அடைவது மற்றும் அவற்றைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை அமைச்சுக்கு கையளிக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. அத்துடன், புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்படுவதால் நாளாந்தம் ஏற்படுகின்ற இழப்புக்கள் குறித்து கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.

அத்துடன், 2020 ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி அரசாங்க நிதி சுற்றறிக்கைக்கு அமைய கொள்முதல் திட்டத்திற்கு பிரதம கணக்காளரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருக்கின்றபோதும், 2024 ஆண்டு கொள்முதல் திட்டத்திற்கு உரிய அனுமதி பெறப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் குழு வலியுறுத்தியது.

அத்துடன், புகையிரதத்தின் ஊடாக சுண்ணாம்புக் கல் போக்குவரத்தை மேற்கொள்ள சியாம் சிட்டி சீமெந்து (லங்கா) நிறுவனத்திடமிருந்து 2024 டிசம்பர் 31ஆம் திகதிவரையில் அறவிடப்பட்டிருக்க வேண்டிய ரூ 2,187, 326 நிலுவை வருமானத்தை அறவிடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும், அறவிடப்பட வேண்டிய தொகையை உரிய முறையில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதேநேரம், கடந்த மே மாதம் 22ஆம் திகதி கோபா குழுவின் உறுப்பினர்கள் இரத்மலானை புகையிரத பராமரிப்பு வேலைத்தளத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், இந்த விஜயத்தின் போது கண்டறிந்த விடயங்கள் பற்றி குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அகற்றப்பட வேண்டிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வேலைத்தளத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பதாகவும், சில இயந்திரங்கள் தேவையான சூழலில் நிறுவப்படவில்லையென்றும், சில உபகரணங்கள் தேவைக்கு அதிகமாகக் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது என்றும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. பதினொரு புகையிரத இன்ஜின்கள் கொள்வனவு செய்யப்பட்டமை, அவற்றின் செலவு, பராமரிப்புச் செலவு தொடர்பான அறிக்கையைக் கையளிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அத்துடன், கடந்த 5 வருட காலத்திற்குள் பெற்றுக் கொண்ட நிதி முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை குழுவிற்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தில் கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருன ஜயசேகர, குழுவின் உறுப்பினர்களான ஜே.சி.அலவத்துவல, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சந்தன சூரியாராச்சி, டி.கே.ஜயசுந்தர, ருவன்திலக ஜயகொடி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, மற்றும் மஞ்சுள சூரியாராச்சி ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]