எதிர்காலத்தில் எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி.எஸ். ராஜகருணா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார். இதுவரை உடனடி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பல எரிபொருள் கப்பல்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே நாட்டிற்கு வந்துள்ள இரண்டு எரிபொருள் கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (27) வந்தடைந்த கப்பலில் 30,000 மெட்ரிக் டொன் 92 ரக பெட்ரோலும், 5,000 மெட்ரிக் டொன் 95 ரக பெட்ரோலும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 18,000 மெட்ரிக் டொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டொன் 92 ரக பெட்ரோலை ஏற்றிய ஒரு IOC கப்பல் நாளை (29) வந்து சேர உள்ளது, அதே நேரத்தில் 37,000 மெட்ரிக் டொன் டீசல் ஏற்றிய மற்றொரு கப்பல் ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது.
அத்துடன், ஏப்ரல் மாதம் முழுவதும் இன்னும் பல எரிபொருள் கப்பல்கள் வந்து சேர உள்ளதாகவும், அதன் மூலம் நாட்டிற்குத் தேவையான டீசல், பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கும் என்றும் தலைவர் மேலும் விளக்கினார். இவை யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருந்து வரும் கப்பல்கள் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் மட்டுமின்றி, பிற தரப்பினரிடமிருந்தும் எரிபொருள் கப்பல்களை இறக்குமதி செய்ய அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது, அதற்காக ஒரு முறையான திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கும், எரிபொருள் ஒதுக்கீடுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் எரிசக்தி அமைச்சின் கீழ் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சில நாட்களில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற சந்தேகத்தின் காரணமாக மக்கள் எரிபொருளைப் பதுக்கி வைத்ததாகவும், இது எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்க வழிவகுத்ததாகவும் அவர் கூறினார். ஒற்றை-இரட்டை முறைப்படி எரிபொருள் வழங்கப்படுவதால், வரிசைகள் குறைந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


