உலக சுற்றாடல் தினத்திற்காக "Clean Sri Lanka" வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் கொழும்பு சமுத்திர மாவத்தை கடற்கரைப் பகுதியில் மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டம்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, Clean Sri Lanka செயலகத்தால் செயல்படுத்தப்படும், கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையம் அருகே இருந்து வெள்ளவத்தை நோக்கி, கொழும்பு சமுத்திர மாவத்தை கடற்கரைப் பகுதியில் மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டம் இன்று (05) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் 1600 "தக்கட" கன்றுகள் நடும் பணி இன்று தொடங்கியது, மேலும் எதிர்காலத்தில் இதை 6000 கன்றுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அரச, தனியார் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
உப்புத்தன்மை கொண்ட சூழல்களுக்கு அதிக திறன் கொண்ட இரண்டு இனங்களைக் கொண்ட இந்த "தக்கட தாவரம்", சிவப்பு தரவுப் பட்டியல் அறிக்கையின்படி அச்சுறுத்தலுக்கு உள்ளான தாவர இனமாகும். இன்று இந்த இடத்தில் நடப்படும் Scaevola taccada செடி, சுமார் 5 முதல் 6 அடி உயரம் வரை வளரும் ஒரு புதர் இனமாகும். எனவே, நகர்ப்புற சூழலுக்கு ஏற்ற பரிந்துரைக்கப்பட்ட உயரம் மற்றும் பசுமை நிறத்துடன் இது மிகவும் கவர்ச்சிகரமான தாவரமாக, நகரத்திற்கு அழகு சேர்க்கும்.
இலங்கை இராணுவம், இலங்கைப் பொலிஸின் சுற்றாடல் மற்றும் போக்குவரத்து பிரிவு, இலங்கை புகையிரதத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்திற்கு எல்.பி. பினேன்ஸ் நிறுவனம் மற்றும் ஹெம்சந்து சந்தைப்படுத்தல் நிறுவனம் ஆகியவை அனுசரணை வழங்கியுள்ளன.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் வ்ராய் கெலி பல்தசார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ஜீ. எம். ஆர். டீ. அபோன்சு மற்றும் அனுசரணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு