யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (12.05.2025) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய பௌத்த மதகுரு ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ அவர்கள் கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கியபோது, புத்த பெருமான் பிறந்த, ஞானம் பெற்ற மற்றும் சமாதியடைந்த தினமே வெசாக் பௌர்ணமி தினம் எனவும், உலகத்தின் அனைத்து மக்களும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும் எனவும், பாவங்களிலிருந்து விலகியிருத்தல் வேண்டும் என்பதும் தர்ம போதனையாகும் எனவும் குறிப்பிட்டார். மேலும், உலகத்தில் உள்ள எல்லா மக்களிடையும் சாந்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் வேண்டப்படுவதாகவும், புத்த தர்மத்தில் எல்லா மக்களும் சமம் என்பதையே புத்த பெருமானின் போதனை உணர்த்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை வாழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் ஆசீர்வாதம் செய்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டனர்.