தாய்லாந்திலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளின் பாதயாத்திரை அண்மையில் (10) திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பமானது.
திருகோணமலை – கண்டி பிரதான வீதி ஊடாக வருகை தந்த பிக்குகள் அடங்கிய குழுவினரை, திருகோணமலை மாவட்ட செயலகம் சார்பில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையிலான குழுவினர் வரவேற்று ஆசிபெற்றுக்கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வின்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலகத்தின் பல அதிகாரிகளும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகளுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
குறித்த பாதயாத்திரை திருகோணமலை, கந்தளாய், ஹபரணை, அனுராதபுரம், குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகள் ஊடாக நடைபெறவுள்ளது.
10 நாட்கள் நடைபயணமாக நடைபெறும் இப்பாதயாத்திரையில் பங்கேற்கும் பிக்குகள் இலங்கையில் மொத்தமாக 20 நாட்கள் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தர்ம அன்பர்களும் பக்தியுடன் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், பாதயாத்திரையின் போது பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


