கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஏற்பாடு செய்த 1 ஏக்கர் கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிந்துரைக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், 20 உற்பத்தியாளர் குழுக்களைச் சேர்ந்த 120 பயனாளிகளுக்கு (ஒவ்வொரு குழுவிலும் ஆறு உறுப்பினர்கள்) ஆரம்பக்கட்ட தள அனுமதிக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம், அவர்கள் கடல் அட்டை வளர்ப்பிற்கான நீரியல் வளர்ப்பு முகாமைத்துவ அனுமதிப்பத்திரத்தை (Aquaculture Management Licence) பெற்றுக்கொண்டு உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடுத்த கட்டத்திற்கு முன்னேறவுள்ளனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடல் அட்டை வளர்ப்பு என்பது கடற்கரை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் உருவாக்கும் முக்கிய துறையாக இருப்பதுடன், நாட்டின் நீலப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்தார்.
மேலும், சமூக அடிப்படையிலான நீரியல் வளர்ப்புத் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் கடற்றொழில் அமைச்சு தொடர்ந்தும் உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. கித்சிறி தர்மபிரிய, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி வனஜா செல்வரத்தினம், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண உதவி பணிப்பாளர் பீ. நிருபராஜ், ஊர்காவற்துறை கடற்றொழில் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சின் மற்றும் NAQDA-வின் அதிகாரிகள், உற்பத்தியாளர் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


