இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15 ஜூன்) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இதன்போது, பாதுகாப்பு பிரதியமைச்சரும் சீன பாதுகாப்பு ஆலோசகரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கை ஆயுதப்படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பை பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டினார். மேலும், நில அடிப்படையிலான படை நிலைப்பாட்டிலிருந்து கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை முன்னெடுத்து வரும் தற்போதைய மூலோபாய மாற்றத்தை விளக்கியதுடன், நடுநிலையான அணிசேரா வெளிநாட்டுக் கொள்கைக்கான நாட்டின் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்தினார்.
எதிர்கால ஒத்துழைப்பிற்கான முக்கிய துறைகளாக போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தலை எதிர்கொள்ளும் கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பயிற்சி மற்றும் ஒப்புருவாக்க (Simulation) நிகழ்ச்சிகள், அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவை இரு தரப்பினராலும் அடையாளம் காணப்பட்டன.
இந்த சந்திப்பில் சீனத் தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படை ஆலோசகர் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.


