இந்திய ஆடை துறை அமைச்சர் கிரிராஜ் சிங் (Giriraj Singh) அவர்களின் விசேட அழைப்பின் பேரில் புதுடில்லி நகரில் நடைபெறும் 'Barath Tex' சர்வதேச கண்காட்சியில் கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் இந்திய ஆடைத் துறை விவகார இராஜாங்க அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா (Pabitra Margherita) இடையே விசேட இரு தரப்பு கலந்துரையாடல் நேற்று (14) புதுடில்லி நகரில் இடம்பெற்றது.
இலங்கையின் தொழில்துறையை நவீனமயமாக்குவதற்கும் சர்வதேச சந்தையைக் கைப்பற்றுவதற்கும் தேவையான தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஆதரவை வழங்குவது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பல்வேறு முக்கிய துறைகளில் மேம்படுத்துவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி, தொழில்நுட்ப மற்றும் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முதன்மை நிறுவனமான தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) மூலம் இலங்கை மாணவர்களுக்கான பட்டப்படிப்பு பயிற்சித் திட்டங்களைத் தொடங்குவது குறித்தும், அதற்கான பாடத்திட்டம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வது குறித்தும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன. மேலும், பாரம்பரிய மற்றும் நவீன ஆடைத் தொழில்களை மேம்படுத்தும் பொருட்டு, கைத்தறி ஆடைகள், உற்பத்தி மற்றும் நவீன தொழில்நுட்ப ஜவுளிகளின் உற்பத்திக்காக இரு நாடுகளின் திறன்களையும் ஒருங்கிணைத்து கூட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. கூடுதலாக, இலங்கையின் கனிம வளங்களுக்காக இந்தியாவிலிருந்து தொழில்நுட்ப மற்றும் முதலீட்டுப் பங்களிப்புகளைப் பெறுவது தொடர்பான விடயங்கள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 'எக்ஸ்போ 2027' சர்வதேசக் கண்காட்சிக்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதில் இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஆர்வத்துடனான பங்கேற்பு குறித்தும் அமைச்சர் இந்தியக் குழுவினருடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்


