சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரின் வேண்டுகோளின் பேரில், இந்திய அரசு நாட்டிற்கு 17 அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது
14,200 கிலோவிற்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன
இந்திய அரசாங்கத்திடமிருந்து 17 அத்தியாவசிய மருந்துகளும் 14,200 கிலோவிற்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்களும் நேற்று (14) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யஞ்சல் பாண்டே அவர்களால் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டன.
அண்மையில் சுகாதாரம் மற்றும் செகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது அமைச்சர் விடுத்த வேண்டுகோளின் பேரில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளின் தொகுதி நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த 17 வகையான மருந்துகளில் முக்கியமாக இதய நோய் சிகிச்சை, நீரிழிவு மற்றும் அதன் தொடர்புடைய சிக்கல்களை நிர்வகித்தல் மற்றும் பல்வேறு நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளன.
இந்த மருந்து வகைகள், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கும், அரச மருத்துவமனை அமைப்புக்கும் திறமையான சிகிச்சை சேவைகளை வழங்குவதில் பெரிதும் உதவியாக இருக்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
அண்டை நட்பு நாடான இந்தியா, இலங்கை துன்பத்தில் இருக்கும் போதெல்லாம் உதவிய நாடாக வரலாறு முழுவதும் அறியப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.


