எதிர்வரும் கதிர்காம யாத்திரைக் காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காம புனித பூமிக்கு வருகை தரும் பக்தர்கள் பொலித்தீனைப் பயன்படுத்தாது யாத்திரையை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சர் வைத்திய தம்மிக பட்டபெந்தி பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (18) சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
கதிர்காம புனித பூமியை தரிசிப்பதற்கு இந்த வருடத்தில் 30,000 இற்கும் அதிகமானோர் பாத யாத்திரைக்காக வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் பாத யாத்திரை நாளை (20) ஆரம்பமாக உள்ளது
சம்பிரதாய பூர்வமாக ஒவ்வொரு வருடமும் இந்தப் பாத யாத்திரைக்காக பக்தர்கள் கலந்து கொள்வதுடன் இவ்வாறு சுற்றாடல் நேயமாக பொலித்தீன் , பிளாஸ்டிக் பயன்படுத்தாது இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து யாழ மற்றும் குமண வனப் பூங்காக்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பாரம்பரிய பாதயாத்திரையை சூழல் நேயத்துடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு இதன் போது அமைச்சர் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்ததுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பாவனையின்றிய பசுமை பாத யாத்திரையாக மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அதன்படி இம்முறை பாதையாத்திரையில் பங்குபற்றும் யாத்திரிகர்கள் சூழல் கட்டமைப்பிற்கு மற்றும் வனப் பூங்காக்களில் வாழும் விலங்குகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் செயல்படுமாறும் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி கோரிக்கை விடுத்தார்.
இங்கு கருத்து தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாறசிங்க, பாதயாத்திரைக்காக குமண மற்றும் யாழ பூங்காக்கள் ஊடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்காக பாதுகாப்பை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் எடுத்துச் இல்லாதிருக்குமாறும் அவர் மேலும் வலியுறுத்தினார்.