கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேரில் சென்று பார்வையிட்டதுடன்(ஜூன் 03) அது தொடர்பிலான மதிப்பிடுகளையும் மேற்கொண்டார்.
பாதுகாப்பு செயலாளர் தனது இந்த விஜயத்தின் போது, அப்பகுதியில் உள்ள முப்படைகள் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் பாதுகாப்பு தொடர்பில் தற்போது அடையாளங் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் எந்தவொரு அவசர நிலமைகளையும் சமாளிக்க தேவையான செயற்பாடு ரீதியிலான தயார்நிலை குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற பாரிய அர்ப்பணிப்பையும், மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டி பாராட்டினார்.
பாதுகாப்புப் படையினருக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும், குறிப்பாக பல்லின மக்கள் மற்றும் கலாச்சார ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள மக்களுடன் சிறந்த தொடர்பை பேணுமாறும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.
கிழக்கு பிராந்தியத்தை மையாமாகக் கொண்டு ஏற்படக்கூடிய அரச எதிர்ப்பு அல்லது தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான விழிப்புடனும் பொறுப்புடனும் செயலாற்ற வேண்டுமெனவும் இது தொடர்பில், முப்படையினரும் விசேட அதிரடிப் படையினரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு பணிபுரிய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்துச் செல்லும் இடங்களான மட்டக்களப்பு, பாசிக்குடா, அறுகம்பை போன்ற பகுதிகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் சமூக பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் கொண்டுள்ள அர்ப்பணிப்பு அவரது இன்றைய விஜயத்தின் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.