அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கௌரவ ரிச்சர்ட் மார்ல்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) உடன் நேற்று (ஜூன் 03) கொழும்பில் உள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீவன்சும் இதன்போது சமூகமளித்திருந்தார்.
அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் தொடர்பில் இந்த கலந்துரையாடளின் போது கவனம் செலுத்தப்பட்டது. தற்போதுள்ள கூட்டாண்மைகளை விரிவுபடுத்துதல், பிராந்திய மற்றும் கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் கள விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டது.
மேலும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இலங்கையின் மூலோபாய பங்கை அமைச்சர் மார்ல்ஸ் பாராட்டியதுடன், இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை (MDA) மேம்படுத்துவதில் அவுஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த மற்றும் சுமுகமான பாதுகாப்பு உறவுகளை பிரதி அமைச்சர் ஜயசேகர எடுத்துக்காட்டியதுடன் நிலையான ஈடுபாடு மற்றும் பரஸ்பர ஆதரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், 2022 முதல் இலங்கை கடற்படை (SLN) மற்றும் இலங்கை விமானப்படைக்கு (SLAF) பல மில்லியன் டாலர் பெறுமதியான எரிபொருள் மானியம் உட்பட அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கை விமானப்படைக்கு KA-350 பீச் கிராஃப்ட் மற்றும் இலங்கை கடற்படை ஹைட்ரோகிராஃபிக் சேவைக்கு அதிநவீன Shallow Water Multi-Beam Echo Sounder (SWMBES) இயந்திரமொன்றையும் அன்பளித்தமைக்கு பிரதி அமைச்சர் ஜயசேகர நன்றி தெரிவித்தார், இவை இச்சேவைகளின் கண்காணிப்பு திறன்களை கணிசமாக அதிகரிக்கும் .
இந்து - பசுபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய உரையாடல் மூலம் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.