பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில் முன்பிள்ளைப் பருவ விருத்தி தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் ஆரம்பகட்ட கலந்துரையாடல் "இசுறுபாய" கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதன்போது நாடு முழுவதும் பல்வேறு விதங்களில் செயற்படுத்தப்படுகின்ற முன் பிள்ளைப் பருவ அபிவிருத்திக் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரே கொள்கையின் கீழ் செயற்படுத்துவதற்காக அவசியமான கொள்கையைத் தயாரித்து, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து கொள்கைப் பிரகடனமாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக தயாரிக்குமாறு பிரதமரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அந்தப் பொதுக் கொள்கையில் மத்திய அரசாங்கத்திற்கும், சகல மாகாணங்களுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்றும், அதில் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தியுடன் தொடர்பான ஆசிரியர் வழிகாட்டல், ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் சம்பளம், ஆட்சேர்ப்புப் பரீட்சை போன்ற சகல விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்று (1), ஆறு (6) மற்றும் பத்து (10) ஆகிய தரங்களுக்கு புதிய கல்வி சீர்திருத்தத்தை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில், இந்த முன் பிள்ளைப் பருவ விருத்திக் கொள்கையையும் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.