தேசிய கல்வியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தி அவற்றை மறுசீரமைப்பதற்கான நிபுணர் குழு நியமனம்
நாம் எதிர்பார்க்கும் கல்வி மாற்றத்தை அடையத்தக்க ஆசிரியர்களை உருவாக்கும் சூழல் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அரசாங்கம் எதிர்பார்க்கும் கல்வித்துறையின் மாற்ற இலக்குகளை அடைந்துகொள்ளக்கூடிய திறன்களையும் தலைமைத்துவப் பண்புகளையும் கொண்ட ஆசிரியர்களை உருவாக்கத்தக்க சூழல் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்காக நியமிக்கப்பட்ட புதிய நிபுணர் குழுவின் உறுப்பினர்களுடன் 2026.04.02 ஆம் திகதி இசுருபாய வில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைப் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி அவர்களின் தலைமையில் அமைந்துள்ள இக்குழுவில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள முகாமைத்துவத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அரோஷா அதிகாரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறைப் பேராசிரியர் பூபாலசுந்தரம் ஐங்கரன், இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் பி.ஏ.டி. அனில் ஆகியோர் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தேசிய கொள்கை அறிக்கையிலுள்ள கல்விக் கொள்கைக்கு இணங்க, தேசிய கல்வியியல் கல்லூரிகளின் ஒட்டுமொத்த நிறுவனக் கட்டமைப்பையும் உள்ளடக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர் நலன்புரி சேவைகளை மேம்படுத்தல், அதன் நிர்வாக நடவடிக்கைகள், நிலைபேறுதன்மை, கற்றல் சூழல் மற்றும் மதிப்பீட்டு முறைமை, விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு போன்ற விடயங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது இக்குழுவின் பிரதான பணியாகும்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், பாடசாலைகளின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியைத் தரமானதாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்குவதில் தேசிய கல்வியியல் கல்லூரிகள் மிக முக்கியமான பணியைச் செய்கின்றன எனக் குறிப்பிட்டார். எனவே, எதிர்காலத்தில் உயர்ந்த தரத்திலான ஆசிரியர்களை உருவாக்கும் இடங்களாக இந்த நிறுவனங்களை மாற்றியமைப்பதற்கு, கல்லூரிகளின் முழுமையான நிறுவனக் கட்டமைப்பை உள்ளடக்கிய விரிவான மேற்பார்வைச் செயல்முறையை இந்த நிபுணர் குழு முன்னெடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இது தொடர்பான நேரடிப் புரிதலைப் பெற்றுக்கொள்வதற்காகக் குழு உறுப்பினர்கள் அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளையும் நேரில் சென்று பார்வையிட வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அந்தக்கண்காணிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் இதன்போது வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


