சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன், இலங்கையில் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் அறிவினைப் பகிர்ந்து கொள்வதற்கான செயலமர்வுத் திட்டம், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஊடக அமைச்சின் (அபிவிருத்தி) பணிப்பாளர் டபிள்யு.பீ.செவ்வந்தி, ஊடகப் பணிப்பாளர் கே.பி.ஐயந்த தலைமையில் நேற்று (12) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மக்கள் நவீன உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிவரும் மக்கள் மத்தியில் பாதுகாப்பான உணவை தெரிவு செய்து, உண்பது தமது உரிமை என்ற சமூக மனப்பாங்கை ஏற்படுத்தும் நோக்கில், உணவு பாதுகாப்பு என்றால் என்ன? அது தொடர்பாக சமூக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகள் குறித்து சுகாதார அமைச்சின் உணவு மருந்து பரிசோதகர் சு.சுதர்ஷன் தெளிவுபடுத்தினார்.
இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.ஸ்ரீ பிறிந்திரன் உணவு பாதுகாப்பு தொடர்பாக எவ்வாறு ஊடக அறிக்கையிடுவது, இதில் பிரதேச ஊடகவியலாளர்களின் வகிபங்கு போன்ற பல விடயங்களை செயன்முறைப் பயிற்சிகளுடன் ஊடகவியலாளர்களுக்கான வழிகாட்டலை வழங்கினார்.
அத்துடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் உணவு பாதுகாப்பு தொடர்பில் பிராந்தியத்தில் உள்ள நிலைமைகள் குறித்து விளக்கமளித்துடன், மற்றும் மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களை ஊடகவியலாளர்கள் முன்வந்தனர்.
இந் நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அதிகாரிகள் யூ டி தீபன் பெரேரா மற்றும் டினா ஜயரத்னம், மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன் என பலர் கலந்து கொண்டனர்