யானைகள் புகையிரதத்தில் மோதுவதை தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) தொழில்நுட்பம் மற்றும் ஏனைய புதிய தொழில்நுட்ப சாதனங்களை விரைவாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24) சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது.
நிரந்தரமாக புகையிரதங்களில் யானைகள் மோதுவதுடன் தொடர்பான சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அதிகரிப்பதை காணக்கூடியதாக உள்ளதுடன் அவ்வாறான சம்பவங்களை முன்னரே அடையாளம் கண்டு பிரயோக தீர்வை பெற்றுக் கொள்வதற்காக புதிய அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பேராதனை பல்கலைக்கழகம் உட்பட அரசாங்க பல்கலைக்கழகங்கள் சிலவற்றினால் அடையாளம் காணப்பட்ட நவீன தொழில்நுட்ப முறைகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதுடன் அந்த தொழில்நுட்பங்களை விரைவாக பிரயோகப்படுத்துதல் தொடர்பான நிறுவனங்களை தெளிவுபடுத்துதலும் இக்கலந்துரையாடலின் நோக்கமாகக் காணப்பட்டது.
இந்நிகழ்வில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோகித உடுவாவள, மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், புகையிரதத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் சூழலியலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரவீந்திர காரியவசம் மற்றும் சமந்த குணசேகர என பலர் கலந்து கொண்டனர்.