இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நேற்று (04) மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றன.
"பல்சமய மக்களின் ஒன்றிணைந்த சுதந்திர தின கொண்டாட்டம் - அழகான தேசம், அன்பான மக்கள்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மூவின மக்ககளின் பங்களிப்புடன் மிகச்சிறப்பாக இடம் பெற்றதுடன் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி ஆகியவற்றின் ஊடாக இரண்டு வாகனப் பேரணிகள் காந்தி பூங்காவை வந்தடைந்ததும் பிரதான அரங்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் மற்றம் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், மத தலைவர்கள் உள்ளிட்ட மாவட்டத்தின் சகல சமூக மக்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் பியந்த பண்டார வின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச். சமுத்திர ஜீவ மரக்கன்றுகளை நிகழ்விற்கு பொதுமக்களுக்கு வழங்கினார்.