எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள மட்டக்களப்பு தயாராகிறது: துறைசார் நிபுணர்கள் பங்கேற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள மட்டக்களப்பு தயாராகிறது: துறைசார் நிபுணர்கள் பங்கேற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
  • :

எதிர்வரும் எல் நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை வலுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட எல் நினோ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ. எஸ். எம். ஸியாத் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், எல் நினோவின் செல்வாக்கும் அதன் தாக்கங்களை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களும் தொடர்பாக இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. ராஜேந்திரம் தெளிவுபடுத்தினார்.

 

இதன் போது, எல் நினோ என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? சுபர் எல் நினோ மற்றும் பலமான (ஸ்ட்ரோங்) எல் நினோ குறித்து விளக்கமளித்த பேராசிரியர், பசுபிக் பெருங்கடலில் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழமையை விட அதிரிப்பதனால் ஏற்படும் இந்த இயற்கை நிகழ்வை இலங்கையிலும் உணரப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

அதனால். எல் நினோ காலங்களில் இலங்கையின் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், அதன்படி சில பகுதிகளில் வறட்சி நீடிக்கலாம்; சில காலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் வளம், நீர்மின் உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம். எனவே காலநிலை முன்னறிவிப்புகளை கவனித்து, நீர் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

 

இந்த நிலை இலங்கைக்கு புதிய விடயம் அல்ல என்றும் குறிப்பிட்ட பேராசிரியர், வழமைக்கு மாறான மழை வீழ்ச்சி அதிகம் ஏற்படும் போது அதனை முகாமை செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்டம் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தினார்.

 

அதேவேளை வெள்ளம் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வறட்சி எமது நாட்டில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது எதிர்வு கூறப்படவில்லை எனினும், எல் நினோவில் இத்தாக்கமும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இதன்போது வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்குப் பகுதி, அறுவடை நாட்காட்டி, நீர் வளங்கள், சுற்றாடல் நேய முறைமை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் அனுபவம் மற்றும் ஆய்வுகளின் படி கருத்துக்களை முன் வைத்தனர்.

 

எல் நினோ (El Niño) என்பது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும். இது வெறும் கடல் சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல, இது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் ஆழமாக தொடர்புடையது. இது எல் நினோ-தெற்கு அலைவு (ENSO) என்று அழைக்கப்படும் ஒரு இணைந்த அமைப்பாகும். இதன் மற்ற கட்டங்களாக லா நினா ( வழக்கத்தை விட குளிர்ந்த பசிபிக் நீர்) பற்றும் நடுநிலைக்கட்டம் ஆகியன காணப்படுகின்றன.

 

இந்நிகழ்வில் மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சுதாகரன், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாயத் திணைக்கள மற்றும் விவசாய விரிவாக்க அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles