வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தலைமையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தலைமையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
  • :

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ அவர்கள் தலைமையில் நேற்று (20.11.2025) பி.ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் வரவேற்புரை ஆற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்,

வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 2025 ஆம் ஆண்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூபா 1259 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காக மாவட்ட மக்கள் சார்பாக கெளரவ அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தார். மேலும் முடிவுறுத்தப்படாமல் இருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முழுமையாக்கப்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை அடுத்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சு வழங்க வேண்டும் என தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றத்தையும், தேவைப்பாடுகளையும் கெளரவ அமைச்சரின் கவனத்திற்கு அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டதுடன், பிரதேச செயலக ரீதியாக தேவைப்பாடுகளை முன்வைக்குமாறு அரசாங்க அதிபர் அவர்களால் கோரப்பட்டதற்கமைய, பிரதேச செயலாளர்கள் தமது பிரிவுக்குரிய தேவைப்பாடுகளை கெளரவ அமைச்சர் கவனத்திற்கு முன்வைத்தார்கள்.

இறுதியாக கருத்துரையாற்றிய அமைச்சர் அவர்கள், இக் கூட்டம் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாகவும், சனாதிபதி இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறு தன்னை தனிப்பட்ட ரீதியாக அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் ரூபா 5000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மீள்குடியேற்ற செயற்பாடுகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சென்ற ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தாத வீடுகள் தொடர்பாகவும் கவனமெடுக்கப்படும் எனவும், இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles